தெய்வத்திற்கு ஏதாவது ஒன்றை அர்ப்பணிக்காமல் பூஜை நிறைவு பெறுவதில்லை. சிவபெருமான் மிக எளிமையானவர், களங்கமற்றவர்,மற்றும் அதிக எதிர்பார்ப்பு இல்லாதவர்; எனவே அவர் போலேநாத் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் அவருக்கு வில்வ இலையை மட்டும் அர்பணிப்பது போதுமானது. வில்வ இலையை அர்பணிப்பது என்பது ஒருவரது தமஸ், ரஜஸ் மற்றும் சத்துவம் ஆகிய மூன்று குணங்களை சமர்ப்பணம் செய்வதைக் குறிக்கிறது. உங்களது வாழ்க்கையின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை சிவபெருமானிடம் சமர்ப்பணம் செய்து விடுபட வேண்டும்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
வில்வ பத்ரா என்பது என்ன?
வில்வ பத்ரா என்பது ‘பில்வ பத்ரா’ என்று சமஸ்கிருதத்தில் அறியப்படும் ஒரு செடியாகும். ’பில்வா’ என்ற சொல் வில்வ மரம் என்றும், ‘பத்ரா’ என்பது இலை என்றும் பொருள்படும். வில்வபத்ரா என்ற செடி வில்வ பழத்தையும் சேர்த்துக் குறிக்கிறது; வில்வபழம் கடினமான ஓட்டுடன் ஒரு சிறிய புளிப்புத் தன்மையும் கொண்டது. இந்தியாவில் நீங்கள் வசிக்கும் பிரேதசத்தைப் பொறுத்து வில்வ பத்ராவிற்கு பல்வேறு பெயர்களும், உச்சரிப்புகளும் உள்ளன. இந்த செடிக்கு, கலாச்சார, சமூக மற்றும் மருத்துவ முக்கியத்துவம் உள்ளது.
சிவ பெருமானுக்கு வில்வ இலையினை ஏன் அர்ப்பணிக்கின்றோம்?
சிவ பெருமானை வணங்கும் பொழுது, அர்ப்பணிக்கப்படும் முக்கியமான பூஜைப் பொருட்களுள் ஒன்றாக வில்வ இலை உள்ளது. வில்வ இலைகள் சிவ பெருமானுக்குப் பிடித்தமானவை எனறு கூறப்படுகிறது. மூன்று இதழ்களைப் கொண்ட வில்வ இலை மும்மூர்த்திகளான பிரம்மன், விஷ்ணு மற்றும் மகேசனை (சிவனை) அடையாளப்படுத்துகிறது. சாத்திரங்களின்படி வில்வ இலையின் மூன்று இதழ்கள் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிக்கின்றன.
சமணர்களும் வில்வ இலையினை மங்களகரமானதாகக் கருதுகின்றனர். 23 ஆவது தீர்த்தங்கரரான பார்ஷ்வநாதர் இந்த மரத்தின் அடியில் தான் நிர்வாணம் அடைந்ததாக நம்பப்படுகிறது.
வில்வ இலையின் ஆச்சரியப்படுத்தும் நன்மைகள்
வில்வ இலையின் பல்வேறு பயன்களைப் பற்றி அறிவது உங்களுக்கு சுவாரசியத்தை அளிக்கக்கூடும். இது மருந்தாக, தோல் பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு, முகப்பூச்சாக(face pack), அல்லது கோடைக்காலத்தில் புத்துணர்ச்சித் தரும் பானமாக பயன்படுகிறது.
1. வில்வ இலையின் மருத்துவ முக்கியத்துவம்
அ. வில்வ இலைக்கு மிகுந்த தனித்தன்மை வாய்ந்த மருத்துவ பலன்கள உள்ளன. இதன் பழம் வைட்டமின்கள், கனிமங்கள் நிறைந்த ஆதாரமாக உள்ளது. உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ரிபோஃபிளேவின், கால்சியம், பொட்டாசியம், நார்சத்து, வைட்டமின் பி1, பி6 மற்றும் பி12 இதில் அடங்கியுள்ளன.
ஆ. வாதம்,பித்தம் மற்றும் கபம் என்று ஆயுர் வேதம் கூறும் மூன்று தோஷங்களை சமநிலைக்குக் கொண்டு வருவதற்கு வில்வ இலையை உட்கொள்ளுதல் உதவுகிறது.
இ. வில்வ பழம் உயிர்வளியேற்ற தடுப்பிகளைக் (antioxidants) கொண்டது, மற்றும் வயிற்று போக்கு, இரத்தக்கழிசல் வாந்தி போன்ற வயிற்றுக் கோளாறுகளை, குணப்படுத்தும் மலமிளக்கும் தன்மைக் கொண்டது; ஜீரண மண்டலத்தையும் அது வலுவாக்குகிறது.
ஈ. வில்வ பத்ரா உட்கொள்ளுதல் வாழ்க்கை முறை நோய்களான நீரிழிவு நோய், இரத்த கொதிப்பு, இருதய கோளாறுகள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. சருமத்திற்கு வில்வ இலை பயக்கும் நன்மைகள்
அ. அதிகமாக வியர்ப்பதனால் ஏற்படும் உடல் துர்நாற்றம் மற்றும் சருமத்தில் ஏற்படும் தடிப்புகள் ஆகியவற்றால் நீங்கள் இன்னல்படும் பொழுது, வில்வ இலை கலவையை சில நாட்கள் தடவிக் கொள்வது, உடல் துர்நாற்றத்தை குறைக்க உதவும்.
ஆ. வில்வ இலையை மெல்வது, அல்லது அதன் சாறினைக் குடிப்பது, முடி உதிரும் பிரச்சினையைத் தீர்க்க மற்றும் சொரசொரப்பான, வறண்ட கூந்தலை மிருதுவாக்க உதவுகிறது.
இ. மருந்துகளின் பக்க விளைவுகளால் தோலில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகளை அகற்ற வில்வ இலை கலவை உதவுகிறது.
3. வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பது எப்படி?
வில்வ செடி பொதுவாகக் காடுகளில் வளர்வதால், அது மிக எளிதாகக் கிட்டுவதில்லை. வில்வ செடி பார்வதி தேவியின் வியர்வைத் துளிகளிலிருந்து வளர்ந்ததாக ஸ்கந்த புராணம் கூறுவதால், இது மிகவும் மங்களகரமானதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. வில்வ செடியை வீட்டில் வளர்ப்பதற்கு, அதன் வேரினை மழைக்காலத்தில் நடுவது உகந்தது.
4. வில்வ மரம் வாஸ்துவிற்கு அளிக்கும் நன்மைகள்
வில்வ செடி, எதிர்மறை அதிர்வுகளை நீக்கி, சுற்றுச்சூழலில் நேர்மறைத் தன்மையை நிரப்பி, நல்ல ஆரோக்கியத்தையும், செழுமையையும் அளிக்கிறது. ஞானம் பெறுவதற்கு வில்வ மரத்தின் அடியில் விளக்கேற்றுவது நல்லது.
வில்வ, எலுமிச்சைப்பழ பானம் – செய்முறை
கோடைக்காலத்தில், வெப்பத்தைத் தணிக்க ஒரு புத்துணர்ச்சித் தரும் குளிர்பானமாக வில்வபழம் உபயோகிக்கப்படுகிறது. இந்த பானத்தை வீட்டில் தயாரிப்பது எப்படி என்பதைக் காண்போம்.
- தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம் : 0 நிமிடங்கள்
- மொத்த நேரம். : 10 நிமிடங்கள்
- கடினத்தன்மை : சுலபம்
தேவையான பொருட்கள்
- 1 வில்வ பழம்
- 1-2 கிளாஸ் தண்ணீர்
- 1/2 எலுமிச்சைப்பழம்
- 4-5 புதினா இலைகள்
- வெல்லம்/நாட்டுச்சக்கரை – தேவைக்கேற்ப.
எப்படி தயாரிப்பது:
- ஒரு வில்வ பழத்தை எடுத்து அதன் சதையை பிரித்தெடுக்கவும்.
- பழச்சதையை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
- பழச்சதையை மசித்து, அதன் விதைகளை நீக்கவும்.
- பிறகு நீரை வடிகட்டவும்.
- புதினா இலைகளை நசுக்கவும்.
- ஒரு டம்ளரில் நசுக்கப்பட்ட புதினா இலைகளையும், எலுமிச்சைச் சாற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
- வடிகட்டிய எலுமிச்சைச் சாற்றை பழச்சதையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பின் குறிப்பு: வில்வ பழம் சாதாரணமாக இனிக்கும். அதனால் உங்கள் சுவைக்கேற்ப வெல்லம் சேர்க்கவும்.





