சுதர்சன கிரியா என்பது ஒரு தனித்துவமான சுவாச நுட்பமாகும், இது மன அழுத்தம், சோர்வு, கோபம், விரக்தி மற்றும் மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை நீக்கி, உங்களை அமைதியாகவும் அதே சமயம் ஆற்றலுடனும், கவனமாகவும், நிதானமாகவும் வைக்கிறது. சுதர்சன கிரியா என்பது உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒத்திசைக்கும் குறிப்பிட்ட இயற்கையான சுவாசலயங்களை ஒருங்கிணைக்கிறது. சுதர்சன கிரியாவை வாழ்க்கையில் பின்பற்றி தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமும், வாழ்க்கைமுறை மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன் மூலமும், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் வழக்கமான பொறுப்புகளை நிறைவேற்றும் போது மன அழுத்தமில்லாது வாழ்க்கையை நிம்மதியாக நடத்துகின்றனர்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனரான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பத்து நாட்கள் மௌனதவத்திற்குப் பிறகு 1981 செப்டம்பர் 17 அன்று ஷிமோகாவில் பத்ரா நதிக்கரையில் சுதர்சன கிரியாவை உணர்ந்து வெளிக்கொணர்ந்தார். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுதர்சன கிரியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார்: “சுவாசம் உடலையும் மனதையும் இணைக்கிறது. ஒவ்வொரு உணர்ச்சிக்கும், சுவாசத்தில் அதற்கேற்ற தாளகதி உள்ளது. உணர்ச்சிகள் நம் சுவாச முறைகளை பாதிப்பதைப் போலவே, நம் சுவாசத்தின் தாளகதியை மாற்றுவதன் மூலம், நம் மனம் மற்றும் நடவடிக்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். இது கோபம், பதட்டம் மற்றும் கவலைகளை வெளியேற்றுகிறது, மனதை முற்றிலும் நிதானமாகவும் உற்சாகமாகவும் ஆக்குகிறது.”
சுவாசத்தின் தாளகதி
உங்கள் உடலுக்கும், மனதுக்கும் குறிப்பிட்ட தாளகதியும், லயமும் உள்ளன. உதாரணமாக, நீங்கள் வெவ்வேறு நேரங்களில் பசியையும், தூங்க வேண்டிய அவசியத்தையும் அனுபவிக்கிறீர்கள்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்குகிறார்: “இயற்கையில் ஒரு லயம் உள்ளது. அதுபோலவே உடலிலும் உணர்ச்சிகளிலும் ஒரு லயம் இருக்கிறது. நீங்கள், உங்கள் எண்ணங்களை கவனித்தால், உங்கள் சந்தேகங்கள் மற்றும் கவலைகளுக்கும் ஒரு லயம் இருப்பதை காண்பீர்கள். ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நீங்கள் ஒரே விதமான உணர்ச்சிகளை அனுபவிக்கிறீர்கள். சுதர்சன கிரியா உடலுக்கும் மனதுக்கும் இடையிலான இணக்கத்தை மீட்டெடுக்கிறது. இந்த தாளகதி ஒத்திசைவாக இருக்கும்போது, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வின் உணர்வை நாம் உணர்கிறோம். இந்த தாளகதி ஒத்திசைவில் இல்லாதபொழுது, நாம் அசௌகரியத்தையும் அதிருப்தியையும் அனுபவிக்கிறோம்.”
ஒவ்வொரு உணர்ச்சிக்கும், சுவாசத்தில் அதற்கேற்ற தாளகதி உள்ளது. உணர்ச்சிகள் நம் சுவாச முறைகளை பாதிப்பதைப் போலவே, நம் சுவாசத்தின் தாளகதியை மாற்றுவதன் மூலம் நம் மனம் மற்றும் நடவடிக்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
அவர் தொடர்கிறார்: சுதர்சன கிரியாவுக்குப் பிறகு, பலர் மிகவும் தூய்மையாகவும், தெளிவாகவும், முழுமையாகவும் இருப்பதை உணர்கிறார்கள், ஏனென்றால் விஷயங்களில் சிக்கியிருந்த நினைவு, அதன் இயற்கைக்கு ஒவ்வாத அந்நியமான பொருளிலிருந்து விடுபட்டு நம்முள் மையத்திற்கு திரும்புகிறது. அதுதான் தூய்மை உணர்வு, நமக்குள் ஒரு சுத்திகரிப்பு செயல்முறையை நாம் செய்ய வேண்டும். தூக்கத்தில், நாம் சோர்விலிருந்து விடுபடுகிறோம் ஆனால், ஆழமான மன அழுத்தங்கள் நம் உடலிலும் மற்றும் மனதிலும் உள்ளன. இவற்றை, சுதர்சன கிரியா உள்ளே இருந்து சுத்தப்படுத்துகிறது.
சுதர்சன கிரியா பயிற்சியின் மீது தனித்தனியாக மேற்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகள், மனதிலும், உடலிலும் ஏற்படும் ஆழ்ந்த மனஅழுத்தத்தை போக்கும் அருமருந்தாக சுதர்சன கிரியாவை காட்டுகின்றன.
சுதர்சன கிரியாவினால் விளையும் நன்மைகள் பின்வருமாறு:
- கவலை, மனச்சோர்வு, அதிர்ச்சிகரமான நிகழ்வுகளின் பிந்தைய – மன உளைச்சல் சீர்குலைவு – (Post-Traumatic-Stress Disorder) மற்றும் மன அழுத்த நிலைகளின் அறிகுறிகளிலிருந்து விடுபடுகிறது.
- மனக்கிளர்ச்சி மற்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகளைக் குறைக்கிறது.
- சுயமரியாதை மற்றும் வாழ்க்கையில் திருப்தி அதிகரிக்கிறது.
- மனதை ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கிறது.
- நல்ல தூக்கத்திற்கு ஏதுவாக இருக்கிறது.
- நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
- இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
- சுவாச செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
யாரெல்லாம் சுதர்சன கிரியாவை கற்று செய்யலாம்?
தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், மன அழுத்தமின்றி வாழவும் விரும்பும் எவரும் சுதர்சன கிரியாவை செய்யலாம். வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்களும், அனைத்து வயதினரும் சுதர்சன கிரியாவின் நன்மைகளை அனுபவித்து வருகிறார்கள். மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள், மேம்பட்ட கவனம் மற்றும் உற்பத்தித்திறனை அனுபவித்துள்ளனர். தொழில்முனைவோர் மற்றும் இல்லத்தரசிகள் சிறந்த ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தையும் அனுபவித்துள்ளனர். முன்னாள் போராளிகள் மற்றும் சிறைக் கைதிகள் வன்முறை போக்குகளை கைவிட்டு, பொது மக்களிடையே மறுவாழ்வு பெற்றுள்ளனர். போர் அகதிகள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கடந்தகால அதிர்ச்சிகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடிந்தது.
சுதர்சன கிரியா செய்வதன் உடனடி நன்மைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன

ஆழமான நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
சுவாசிப்பதால் உடலில் இருந்து 90% நச்சுகளை அகற்ற முடியும். சுதர்சன கிரியாவின் சீரான சுவாசம் உடலின் உயிரணுக்கள் அளவில் (cellular level) நச்சுத்தன்மையை நீக்குகிறது. சுதர்சன கிரியாவினால் உடலில் உள்ள தீய உயிரணுக்களை கொல்லும் இயற்கை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, இது நுண்ணுயிர் நோய்த்தொற்றுகள் மற்றும் கட்டிகளின் பரவலைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, இந்தப் பயிற்சி ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்விலிருந்து நிவாரணம்.
இன்றைய கடினமான உலகில் உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஏனென்றால் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அதை உணர்வதற்கு முன்பே மன அழுத்தத்தின் எரியும் பிடியில் இருப்பீர்கள். சுதர்சன கிரியா பயிற்சியை தினமும் 20 நிமிடங்கள் செய்வது, மன அழுத்தத்திற்கு காரணமான ஊக்கி, கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது. மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைப் போக்குவதில் சுதர்சன கிரியாவின் செயல்திறனை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

சிறந்த தூக்கம்
உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளின் மறுமலர்ச்சிக்கு தரமான தூக்கம் மிகவும் அவசியம். மோசமான தூக்கத்தின் தரம் உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. தினசரி சுதர்சன கிரியாபயிற்சி, நன்றாக தூங்க ஒரு எளிய வழியாகும். சுவாச நுட்பம் தூக்கத்தின் தரத்தை மூன்று மடங்கு மேம்படுத்த உதவுகிறது.

வலிமையான இதயம்
உலகின் இதய நோய் சுமையில் சுமார் 60% இந்தியாவில் உள்ளது. நமது வாழ்க்கைமுறை தினமும் நம் இதயத்தை பராமரிக்க கோருகிறது. சுதர்சன கிரியா உங்கள் இதயத்தை வலுப்படுத்துவதற்கான மிகவும் திறமையான பயிற்சியாகும். இந்த பயிற்சி இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஒருவரின் கொழுப்பு அளவைக் குறைத்து (cholesterol profile) சுவாச செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
தினமும் 20 நிமிடங்கள் சுதர்சன கிரியா பயிற்சி செய்வது, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
சுதர்சன கிரியா எவ்வாறு அறியப்பட்டது ?
1981 ஆம் ஆண்டில் சுதர்சன கிரியாவை நமக்கு அளித்த குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், 10 நாட்கள் மௌன தவத்தில் அமர அவரைத் தூண்டியது எது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்: “நான் ஏற்கனவே உலகம் முழுவதும் பயணம் செய்திருந்தேன். யோகா, தியானம் கற்றுக் கொடுத்தேன். ஆனாலும், மக்கள் முழுமையாக பயன் பெறவில்லை. ஏதோ குறையிருப்பதாக உணர்ந்தேன். அவர்களுக்கு, எவ்வாறு உதவலாம், என்று ஆழ்ந்து யோசித்தேன். மக்கள் தங்கள் ஆன்மீக பயிற்சிகளை செய்தாலும், அவர்களின் வாழ்க்கை வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான நபர்களாக உருவெடுக்கிறார்கள். எனவே, உள்ளத்தின் மௌனத்திற்கும், வாழ்க்கையின் வெளிப்புற வெளிப்பாட்டிற்கும் இடையிலான இந்த இடைவெளியை எவ்வாறு இணைப்பது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மௌனத்தின் போது, சுதர்சன கிரியா ஒரு உத்வேக உணர்வாக வந்தது. இயற்கைக்கு, நமக்கு எதைக் கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்பது தெரியும். மௌனத்திலிருந்து வெளியே வந்த பிறகு, சுதர்சன கிரியாவை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். இதனால் பலர் நல்ல அனுபவங்களை பெற்றனர். உள்ளத்தில் தெளிவு ஏற்பட்டதை உணர்ந்தனர்.”
அப்பொழுதிலிருந்து குருதேவ் நிறுவிய வாழும் கலை அமைப்பின் அனைத்து பயிற்சிகளிலும் “சுதர்சன கிரியா” ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது.