நம்பிக்கையின் சக்தி (Power of faith in tamil)

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை:

மனித வாழ்வின் மைய உள்ளகம் நம்பிக்கையாகும். உயிர் வாழ்வதற்கும், ஒருவரைக் கடினமான காலங்களில் வழிநடத்துவதும் நம்பிக்கையே. மறைந்திருக்கும் தைரியத்தையும், ஆற்றலையும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நம்பிக்கை வெளிக் கொண்டு வருகின்றது.

நம்பிக்கையில் மூன்று வகைகள் உள்ளன. தன் மீது நம்பிக்கை, உலகின் மீது நம்பிக்கை, இறைமையின் மீது நம்பிக்கை. இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. இந்த மூன்று நம்பிக்கைகளுமே திடமாக இருத்தல் வேண்டும். கடவுள் தம்மைப் பாதுகாக்கின்றார் என்பதை அறிந்துணரலே நம்பிக்கையுடன் இருத்தல் என்பதாகும். வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த இது தேவையானதாகவும் போதுமானதாகவும் ஆகின்றது.

அறுவடைக் காலத்தில், விவசாயி, ஒரு பரந்த சல்லடையில் தானியத்தையும் உமியையும் பிரிக்கிறார். ஒரு உயர்ந்த மேடையில் நின்று, சல்லடையில் தானியங்களை குவிக்கிறார். பின்னர், அந்த சல்லடையை அசைக்கத் துவங்குகிறார். சல்லடையிலிருந்து வெளியேறுவது வெறும் உமியானால் அது பறந்து விடுகின்றது. அதே சமயம், கீழே விழும் தானியங்கள் தரையில் தங்கி விடுகின்றன. அது போன்று, உங்கள் நம்பிக்கை அடிக்கடி அசையுமானால், அல்லது கடினமான காலங்களில் நம்பிக்கையின்றி இருக்குமானால், அப்போது, நீங்கள் பறந்து விடும் உமியை ஒத்தவராவீர்கள். பேராபத்துக் காலங்களில் நம்பிக்கை அசைக்கப் படுமானால் அக்காலத்தை புன்முறுவலுடன் கடந்து செல்ல முடியாது. நீங்கள் நம்பிக்கையின்றி இருந்தால் மற்றும் நிகழ்வுகள் உங்களைப் பயமுறுத்தினால், நீங்கள் உமியைப் போன்று பிடிப்பின்றிப் பறந்து காணாமல் போய்விடுவீர்கள். அதே சமயம், அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கை யுடன் இருந்தால், ஸ்திரம் கொண்டு அனைத்தும் சரியாவதைக் காண்பீர்கள்.

ஒருவரது வாழ்க்கையில், "நான் பாக்கியசாலி" என்னும் ஞானம் உறுதியாக நிறுவப் பட்டிருந்தால், அதுவே நம்பிக்கை என்று அழைக்கப் படுகிறது. "நான் பாக்கியசாலி" என்னும் உணர்வே எந்தக் கஷ்டத்தையும் தாண்டி வர உதவும். ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்ந்தால், குறைகள், முணு முணுப்புக்கள், பாதுகாப்பற்ற நிலை அனைத்தும், மறைந்து விடும். இவ்வுலகில் அனைத்தும் நல்லதாகவே இருக்காது. ஆயினும், நீங்கள் நம்பிக்கையில் ஸ்திரமாக இருந்தால், இவ்வுலகில் உங்கள் மன அமைதியைப் பராமரித்துக் கொண்டு முன்னேற முடியும்.

நம்பிக்கை பிரார்த்தனைக்கு அழைத்துச் செல்கின்றது, பிரார்த்தனைதான் உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற முக்கியமான கருவி. பிரார்த்தனை, நேர்மை நாணயம் போன்ற நற் பண்புகளை வளர்க்கின்றது. பிரார்த்தனை இரண்டு சந்தர்ப்பங்களில் அல்லது சில சூழ்நிலைகளின் இணைப்பில் நிகழ்கின்றது. நன்றியுடன் இருக்கும்போது அல்லது நிராதரவாக இருக்கும்போது பிரார்த்தனை செய்கிறீர்கள். இரண்டிலுமே உங்கள் பிரார்த்தனை கேட்கப்பட்டு பதிலளிக்கப் படும். நன்றியின்றியோ அல்லது பிரார்த்தனையின்றியோ இருந்தால் நீங்கள் மிகவும் துன்பமடைவீர்கள்.

உங்கள் அன்பு, மற்றும் நம்பிக்கை, மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இந்த உலகம் ஓர் கொண்டாட்டம்; நீங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்வின் அனைத்து அம்சங்களும் ஏற்றதாழ்வுகள் உள்ளவை. உதாரணமாக, மனித உடல் ஜலதோஷம், இருமல் ஜுரம் இவற்றால் சுலபமாக பாதிக்கப்படலாம், அடுத்த நாளே அவை சரியாகலாம். அது போலவே நிலைமைகள் மாறும் என்னும் சந்தோஷம் எப்போதுமே ஒருவரிடம் நிறுவப் பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒருவரது வாழ்க்கையில் நம்பிக்கை மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. “எனக்கு எதன் மீதும் நம்பிக்கையில்லை" என்று கூறுபவர்கள் கூட தங்களுடைய அந்த வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் ! எங்கே உங்கள் நம்பிக்கையை வைக்கின்றீர்கள் என்பது தான் பிரச்சினை. ஒரு நாஸ்திகருக்கு பொருட்களின் மீதுள்ள நம்பிக்கை கண்கூடாகவும், மக்களின் மீதுள்ள அவரது நம்பிக்கை திடமற்றும், கண்ணுக்குபுலப்படாத படைப்பு சக்தி தெளிவற்றும் உள்ளது.

ஆயினும் இறை நம்பிக்கயுள்ளவருக்கு, கண்ணுக்குபுலப்படாத சக்தி மிக உயர்ந்ததாகவும், மக்களின் மீதுள்ள நம்பிக்கை முக்கியத்துவமற்றதாகவும், பொருட்கள் எந்த வகையிலும் அர்த்த மில்லாதவையாகவும் தோன்றுகின்றன.

இந்தப் பொருளாசைமிக்க உலகில், நம்பிக்கையின் பங்கு மேலும் அதிகமாகத் தெரி கின்றது. நம்பிக்கை ஒருவரை தற்கொலை மனப்போக்கிலிருந்து, விடுவித்து, கண்ணுக்குப் புலப்படாதவை பற்றி தெரிந்து கொள்ள உதவுகின்றது. வாழ்க்கை நம்பிக்கையின் அடிப்படையில் அமையும்போது, ஒருவர் பழியுணர்வு,வெறுப்பு இவற்றில் சிக்கிக் கொள்ளாமல் வேதாந்த எண்ணப் போக்கைப் பின்பற்றுவார். அனைத்தும் சரியாகும் என்னும் நம்பிக்கையிருந்தால் அனைத்துமே சரியாகும்.

நம்பிக்கை என்பது, உங்களுக்குத் தேவையானது கிடைக்கும் என்னும் புரிந்துணரலேயாகும். நம்பிக்கை என்பது, இறைமைக்கு செயல்பட ஓர் வாய்ப்புத் தருவதும் ஆகும் !