நாம் அனைவரும் கோபம் கொள்கிறோம் -சில நேரங்களில் தினமும் கூட! இது இயல்புக்கு மாறானதோ, தவறானதோ அல்ல. ஆனால் விழிப்புணர்வோடு கூடிய கோபம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
நம்மில் சிலர் உச்சகட்ட கோபத்தை அடைய நேரம் எடுத்துக்கொள்கிறோம். ஆயினும் அந்த நிலையை அடையும் பொழுது, கோபக்கனல் நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களையும் சுட்டெரித்து . நம்மை வாட்டி வதைக்கிறது மற்றவர்கள், சட்டென்று கோபமடைந்து, அதே வேகத்தில் தணிந்தும் போகிறார்கள். ஆனால், இந்தச் சுழற்சி மீண்டும் மீண்டும் அர்த்தமில்லாமல் தொடர்கிறது.
இந்த தொடர் சுழற்சியிலிருந்து விடுபடுவதற்கு ஏதேனும் மார்க்கம் உண்டா? குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், கோபம் குறித்த பிரச்சினையான இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து, கடும் உணர்ச்சியை வெல்லும் வழிமுறைகளையும் அளித்துள்ளார்.
கோபம் உங்கள் வலிமை, பந்தத்தின் தீவிரம் மற்றும் வாழ்க்கைப் பற்றிய உங்கள் புரிதல் ஆகியவற்றைப் பொருத்திருக்கிறது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
உங்களது கோபம் எதன் மீது?
நீங்கள் எதன் மீது கோபப்படுகிறீர்கள்? மனிதர்கள், நிகழ்வுகள், சூழ்நிலைகள்? கண்டிப்பாக, நீங்கள் பொருட்கள் மீது கோபப்படமாட்டீர்கள். எனவே உங்கள் கோபம் மொத்தமும் மக்கள் அல்லது சூழ்நிலைகள் மீது செலுத்தப்படுகிறது நீங்களும் அந்த நபர்களில் உள்ளடக்கம் – ஒன்று நீங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கலாம், அல்லது வேறு யாரோ ஒருவர் மீது கோபமாக இருக்கலாம். விழித்தெழுந்து பாருங்கள்: இரண்டும் அர்த்தமற்றவை மற்றும் பயனற்றவை.
கோபப்படுவதும் தணிவதும்
எப்பொழுதும் கோபப்படாமல் இருப்பது சாத்தியமா? இதுவரை உங்களது அனுபவம் என்ன? குழந்தைப் பருவத்தில் உங்களது பொம்மை உங்களிடமிருந்து பறிக்கப்பட்டபொழுது நீங்கள் கோபம் அடைந்தீர்கள். பால், உணவு, மிட்டாய்கள் அல்லது பொம்மைகள் நீங்கள் விரும்பிய நேரத்தில் கொடுக்கப்படவில்லை என்றால் நீங்கள் கத்திக் கூச்சலிட்டீர்கள். நீங்கள் செய்தீர்கள் அல்லவா? ஆம் நீங்கள் செய்திருக்கிறீர்கள். பிறகு உங்களது பள்ளியில், கல்லூரியில், வேலைப்பார்க்கும் இடத்தில் மற்றும் உங்களது நண்பர்களுடனும் நீங்கள் கோப உணர்ச்சியை அனுபவித்திருக்கிறீர்கள். எனவே கோபம் என்பது பொதுவாக அனுபவிக்கப்படும் ஒரு உணர்ச்சியாகும்.
கோபத்திலிருந்து விரைவில் வெளிவருவது முக்கியம்.
நீங்கள் எவ்வளவு இடைவெளியில் கோபப்படுகிறீர்கள்? நீங்கள் கோபப்படும் தருணங்களின் எண்ணிக்கை உங்கள் சக்திக்கு எதிர்விகிதத்தில் உள்ளது. நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருக்கிறீர்களோ அவ்வளவு குறைவாக கோபத்திற்கு உள்ளாவீர்கள்; எவ்வளவு பலவீனமாக உள்ளீர்களோ அவ்வளவு அதிகமாக கோபத்திற்கு உள்ளாவீர்கள். இதனைக் கவனத்தில் வைக்க வேண்டும்: உங்களது சக்தி எதில் உள்ளது? எதனால் அதை இழக்கிறீர்கள்?
தொலைநோக்கு மற்றும் உங்களது வாழ்க்கையைப் பற்றியும் , சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த புரிதல் இரண்டாவது காரணியாகும். இதுவும் ஒரு பங்கு வகிக்கிறது.
மூன்றாவது காரணி உங்களது பற்றுதல் – பற்றுதல் உங்களுக்குள் கோபத்தை எழச் செய்கிறது. நீங்கள் விரும்பும் விஷயத்திற்கான பற்றின் அளவு முக்கியம். அதனால், உங்கள் கோபத்தின் பின்னால் ஆசை உள்ளது. அதை நீங்கள் உணர வேண்டும். கோபம், சுகம், ஆசை அல்லது அகந்தையினால் ஏற்படும் பொழுது நீங்கள் வேறு விதமாக நடந்து கொள்கிறீர்கள். இரக்கத்தினால் எழும் கோபம், நடப்பனவற்றை சரிபடுத்தும் நோக்குடன் எழும் கோபம், வித்தியாசமானது. இத்தகைய சினம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி அல்ல.
நேர்மறையான மாற்றத்திற்கான ஒரு கருவியாக கோபத்தைப் பயன்படுத்துதல்
கோபம் நெறிப்படுத்தப்பட வேண்டும்.கோபம் உங்களை பயன்படுத்திக் கொள்ள விடாதீர்கள் .மாறாக, நீங்கள் கோபத்தை ஒரு கருவியாகத் தேவைப்படும் நேரத்தில் உபயோகித்துக்கொள்ளலாம்.
கோபம் எப்பொழுதுமே நல்லதல்ல என்று எண்ண வேண்டாம்.அரிதாக உபயோகிக்கப்பட்டால் கோபம் விலையுயர்ந்தது, மதிப்பு மிக்கது.
அப்படியல்லாமல் தினமும் உபயோகிப்போமாயின் கோபத்திற்கு மதிப்பு இல்லை. மாறாக, அது உங்கள் மதிப்பைத் தாழ்த்துகிறது.
கடந்த காலத்தைப் பற்றிய அடக்கி வைக்கப்பட்ட கோபம்
கடந்த காலத்து அடக்கி வைக்கப்பட்ட கோபத்தை எவ்வாறு உங்களால் நீக்க முடியும். உங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டதாக நீங்கள் கருதும் கோபத்தை உணர்ச்சி வடிகாலாக வெளிப்படுத்துவது என்பது முடிவில்லாத ஒன்றாகும். சமுத்திரத்தின் அலைகளை நிறுத்த முயல்வதற்கு ஒப்பாகும்.
கோபம் என்பது ஒரு தனிப்பட்ட ஆற்றல் அல்ல. ஆற்றல் என்பது ஒன்றேயாகும்- இது கோபம், இரக்கம், அன்பு மற்றும் பெருந்தன்மை ஆகியவையாக வெளிப்படுகின்றது. இது இரண்டு வேறுப்பட்ட ஆற்றல்கள் அல்ல; மாறாக, இது வெவ்வேறு வண்ணங்களில் திகழும் ஒரே சக்தியாகும்- ஒரே மின்சாரம், குளிர் சாதன பெட்டி, மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகளுக்கு உபயோகப்படுவது போல.
உங்கள் கோபத்தை அடக்கி விட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய ஞானம் விருத்தியாகும் பொழுது, சத்தியத்தையும், யதார்த்தத்தையும் நீங்கள் உணரும் பொழுது, கடந்த காலத்தின் கோபம், உங்களது முட்டாள்தனம் அல்லது ஞானத்தின் குறைப்பாடே என்பதை உணர்வீர்கள்.
கோபத்தில் உள்ளோரைக் கையாள்வது
கோபத்தில் உள்ளோரை நீங்கள் எப்படி கையாள்வீர்கள்? அவர்களை வேடிக்கைப் பாருங்கள்! தீபாவளியில் பட்டாசுகளுடன் விளையாடுவது போல: பட்டாசுகளின் அருகில் சென்று, பற்ற வைத்துப் பிறகு ஓடிவிடுவீர்கள்! அதன் பின் குதூகலம் கொள்கிறீர்கள். தூரத்திலிருந்து கவனியுங்கள்! நீங்கள் கோபத்தில் உள்ளோரிடம் இதையே செய்ய வேண்டும். எப்படி விலையுயர்ந்த கம்பளத்தின் மீதோ அல்லது வீட்டினுள்ளோ பட்டாசுகளை வெடிப்பது இல்லையோ, அது போல மதிப்புமிக்க பொருட்கள் அவர்களைச் சுற்றி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பட்டாசுகளை தோட்டத்திற்கோ அல்லது தெருக்களுக்கோ, கொண்டு செல்கிறீர்கள். அது போல, நீங்கள் கோபப்படுவோரைக் கண்டு குதூகலம் கொள்ளுங்கள்; அவர்கள் இல்லாமல் உலகத்தில் கேளிக்கை இல்லை.
கடந்த காலத்தில் நீங்கள் கோபத்தில் பதிலடி கொடுக்காமல் இருந்தது நல்லதாயிற்று. கோபத்தை வெளிப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தப்பட்டிருப்பீர்கள். அதனை அடக்கிவைக்கப்பட்ட கோபம் என்று கருத வேண்டாம். எப்படியோ உங்களது புத்தி சாதுர்யம் அந்த கோபமான தருணங்களில் உங்களை பதிலடி கொடுக்காமல் இருக்கச் செய்தது . இதை உங்கள் பலமாக நோக்கவும், பலவீனமாக அல்ல. நீங்கள் கோபத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் நீங்கள் விவேகத்துடன் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் கோபம் நியாயமானது என்ற தவறான நம்பிக்கை…
உங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது மற்றொருவரை திருத்தப் போவதில்லை, உங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தப் போவதில்லை. கோபத்தை அடக்கி வைப்பது – அடக்கி வைக்கப்பட்ட கோபம் – போன்றவை அரைகுறையான உளவியல் சொற்கள் ஆகும். உங்களால், விவேகத்தின் மூலமே நடப்பவற்றை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்; உங்கள் எதிர் நடவடிக்கை எப்பொழுதும் உங்கள் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் செயல்பட வேண்டும், எதிர்நடவடிக்கை அல்ல. அடக்கி வைக்கப்பட்ட கோபம் என்பது முற்றிலும் எதிர்நடவடிக்கையைப் பற்றியதே. நீங்கள் எதிர்வினை மேற்கொள்ளவில்லை என்றால், அது நன்று!
கேள்வி: கடந்த காலத்தைப் பற்றி கோபப்படுவது எந்த அளவிற்கு அறிவுபூர்வமானது?
குருதேவ்: கடந்த காலத்தைப் பற்றி கோபப்படுவதனால் ஏதேனும் நன்மை உண்டா?
முல்லா நசிருதீன் பற்றிய கதை ஒன்று உள்ளது. அவரது மகன் ஒரு விலையுயர்ந்த மின்னனு கருவியைக் கையாள முனைந்த பொழுது, முல்லா அவரை அறைந்தார்!
அவரை எதற்காக அப்படி செய்தார் என்று வினவிய பொழுது, அவர் ” அது உடைந்த பின் அவனை அறைவதில் என்ன பயன்?” என்று பதிலளித்தார்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒன்றைப் பற்றி கோபப்படுவது முட்டாள்தனத்தின் ஒரு அறிகுறி ஆகும். மக்கள், நான் கோபப்படுவதில்லையா என்று கேட்கிறார்கள். நான் எதைப்பற்றி கோபப்பட வேண்டும்? கடந்து சென்று விட்ட காலத்தைப் பற்றியா? நிகழ் காலத்தில் நடக்கும் ஒன்றின் மீது உங்களுக்கு கோபம் ஏற்படுகிறது. ஆனால் கோபத்தைக் கோபத்தால் எதிர்கொள்வதா……என்ன முட்டாள்தனம்! ஒருவர் தவறுக்கு மேல் தவறு செய்வாராயின், அவரிடம் கோபம் கொள்ளலாம். ஆனால் கோபம் உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள்.
ஆரோக்கியமான கோபம் ( Arogya vardhak gussa) நீரில் வரையப்பட்ட கோடு எவ்வளவு நேரம் நிலைத்திருக்கிறதோ, அவ்வளவு நேரமே நீடிக்கும் கோபமே ஆரோக்கியமானது. ஒருவர் தவறு செய்யும் பொழுது கோபப்படாமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. ஆனால் அதனால் ஆட்கொள்ளப்படுவது புத்திசாலித்தனம் அல்ல.
சாதனா உங்கள் மனதை எவ்வித விகாரங்களிலிருந்தும் பாதுகாக்கிறது; அதாவது உங்களை ஆன்மாவிடமிருந்து விலக வைக்கும் சிதைவுகளிலிருந்து பாதுகாக்கிறது
கோபத்திலிருந்து விலகிச் செல்லும் உயர்ந்த பாதை
கோபம் வரும்பொழுது அதனை கட்டுப்படுத்துவது என்பது கடினம். அது நீங்கும் பொழுது குற்ற உணர்வு தொடர்கிறது. இந்த கோபம், குற்ற உணர்வு என்ற இந்த சுழற்சியிலிருந்து எப்படி வெளிவருவது.
கோபத்தை வெளிப்படுத்தும்பொழுது, நீங்கள் குற்ற உணர்வை அனுபவிக்கிறீர்கள். அதனை வெளிப்படுத்தவில்லை என்றால் அடக்கிவிட்டதாக எண்ணுகிறீர்கள். இவ்விரண்டையும் கடப்பதற்கு வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில் நோக்கவும் – ஒரு பரந்த கண்ணோட்டத்தை மேற்கொள்ளவும்.
உங்கள் வாழ்க்கையின் சூழல் அமைப்பை,மாற்றிக்கொள்ளும் பொழுது ,நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு போராட்டமாக காண மாட்டீர்கள்.இந்த உணர்வுகள் வாஸ்தவத்தில் உங்களை பந்தப்படுத்துவதோ, குற்ற உணர்வில் ஆழ்த்துவதோ, திணர வைப்பதோ இல்லை என்பதை உணர்வீர்கள். இவை யாவும் அலங்காரங்களே. உண்மையில் அலங்காரங்கள் பொருளின் தன்மையை பாதிப்பதில்லை – இது கேக்கின் ஐசிங்கில் வெவ்வேறு வண்ணங்களை உருவாக்குவது போன்றது
ஆரோக்கியமான கோபத்தைப் பற்றி மேலும் படித்து அறிந்து கொள்ளுங்கள்
(குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஞான உரைகளிலிருந்து-தொகுக்கப்பட்டது)











